(382) புனிதமான பத்ருப்போர்
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 18 ஏப்ரல், 2024
இஸ்லாமிய வரலாற்றில் முதல் அறப்போர் (பத்ருப்போர்)
ஞாயிறு, 31 மார்ச், 2024
ஐந்து கடமைகளில் சமத்துவமும் சகோதரத்துவமும்
இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!
'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான் இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.
1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழியே கலிமா
ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை (உறுதிமொழியை) மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான் அவர் “முஸ்லிம்” என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும். இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.
இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.
கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.
2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும் நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம் இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது. தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.
3. நோன்பின் மாண்பு
நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.
4. வறுமை ஒழிப்பில் ஜகாத்
செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!
5. ஹஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!
போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ். இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ் என்ற கடமை!
=====================
வெள்ளி, 29 மார்ச், 2024
தொழுகைக்கான அழைப்பின் அற்புதங்கள்
அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்
ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது 'பாங்கு' என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.
அதான் எப்படி தொடங்கியது?
இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள். நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள். சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார் “மனித குரலை” தொழுகைக்கான அழைப்பிற்கு பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார்.
நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்) அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.
பாங்கு வாசகங்களின் பொருள்:
அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)
அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனே அனைத்துக்கும் மேலானவன் என்கிறது இந்த முழக்கம். அனைத்துலகும் அவற்றில் உள்ள படைப்பினங்களும் நமக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரமும் என அனைத்தும் அந்த வல்லோனுக்கே சொந்தம், எனவே அவனது அழைப்பான இந்த அதானுக்கு அல்லது பாங்குக்கு பதிலளிப்பீராக என்ற நினைவூட்டுகிறது இந்த வாசகம்.
அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே நம் வாழ்வின் தலையாய நோக்கம் என்ற உணர்வைப் பெறுவோர் உடனடியாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் வியாபாரத்தையும் தற்காலிகமாக இடைவெளி கொடுத்துவிட்டு தொழுகையில் பங்கு பெறுகிறார்கள்.
கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:
அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.
அதாவது நான் அவனது படைப்பினங்களையோ மனிதர்களையோ மனிதர்கள் சமைத்த சிலைகளையோ உருவங்களையோ அல்லது சமாதிகளையோ வணங்க மாட்டேன். மாறாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று உறுதி கூறுகிறேன் என்பதாக இதன் பொருள் விரியும்.
அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்
படைத்த இறைவன் யாரை இந்தக் காலத்துக்கு தன் தூதராக அனுப்பியுள்ளானோ அவரை என் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று இதன் பொருள் விரியும்.
மேற்கண்டவை இரண்டும் இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்களாகும். ஐவேளையும் இந்த உறுதிமொழி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இஸ்லாம்
ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்
ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்
உண்மையில் இவை இரண்டும்தான் தொழுகைக்கான அழைப்பு வாசகங்களாகும். அதாவது இந்தப் பரீட்சை வாழ்வில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோர்தான் வெற்றி ஈட்டுவார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்தலே இஸ்லாம் எனப்படும். நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பதை உரசிப் பார்க்கும் செயல்தான் ஐவேளைத் தொழுகை.
அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.
லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)
பாங்கின் முக்கியத்துவம்:
பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.
இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.
அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல நன்மைகள் உண்டாகின்றன.
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (திருக்குர்ஆன் 23:1,2,9)
தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.
நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.
கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.
சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.
================
இனவெறிக்கு துணைநின்ற நாத்திகம்!
= மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)
ஒரே ஒரு மனித ஆண்-பெண்
ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச்
சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும்
இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித
சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.
ஒருபுறம் கடவுளின்
பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும் விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன்
அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும்
இல்லாத பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல்
என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான்
மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.
கொடூர விளைவுகள்:
அதனால் வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.
கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின
மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.
இறைவனின் எச்சரிக்கை
இறைவனின் பெயரால் இனவெறி
கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய
நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு
நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன்
கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை
சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம்
உள்ளன.
= வரவிருக்கும் அந்நாளில்
(ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக்
கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான)
கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது.
(திருக்குர்ஆன் 2:281)
= “நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள்
ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா
(ரலி) நூல்: முஸ்லிம் 5038).
= “மறுமை நாளுக்காக நீதியான
தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை
அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)
===============
புதன், 27 மார்ச், 2024
வணக்கத்துக்குரியவன் இறைவன்றி வேறு யார்?
பூமி, ஆறுகள், மலைகள், கடல்கள்,தடுப்பு
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரார்த்தனைக்கு பதில், துன்பம் நீக்குதல்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இருள்களில் வழிகாட்டல், மழைக்கு முன் நற்செய்தி கூறும் காற்று:
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
இல்லாமையில் இருந்து படைபைத் துவங்குதல், இனப்பெருக்கம், படைப்பினங்களுக்கு உணவளித்தல்,
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”
பகுத்தறிவு கொண்டு நேர்மையாக சிந்திக்கும் போது இவ்வுலகைப் படைத்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் எந்த சக்தியும் இவற்றை நிகழ்த்தவில்லை என்பதை அறியலாம். உண்மை இப்படி இருக்க படைத்தவன் அல்லாதவற்றை இறைவன் என்று சொல்வதும் அவற்றை வணங்குவதும் முற்றிலும் அறியாமையே! இது படைத்தவனுக்கு செய்யும் மாபெரும் நன்றிகேடாகும்.
திங்கள், 25 மார்ச், 2024
சமத்துவம் பூக்கும் சோலைகளே பள்ளிவாசல்கள்
ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்ற முழக்கத்தையும் பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்கள் மட்டுமே! உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், எளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில் நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!
பள்ளிவாசல்கள் என்றால்
என்ன?
படைத்த இறைவனை பலரும்
கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர் கை, கால், முகம் இவற்றை கழுவுவதற்கு
வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று
பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்க இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு
ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.
இதைச் செவியுறும் ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் உடனடியாக தொழுகைக்கு
விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில்
அணிவகுத்து நிற்பார்கள்.
தொழுகையாளிகளில் குரான்
அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்
போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று
கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள்.
தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள்.
இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை. பொருட்செலவு இல்லாத சடங்குகள்
இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல்
சமத்துவமும்
சகோதரத்துவமும்
சமூகத்தில்
செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர், படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற கௌரவம்
பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்
இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக
இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும்
அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே
தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது.
ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை
பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை
வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.
நபிகள் நாயகம் இஸ்லாத்தை
போதிக்க ஆரம்பித்ததன் பின் உலகில் நடந்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். உலகெங்கும்
வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இவர்கள் யாருமே அரபு
நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள்
இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக
ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக்
கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள்
இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில்
தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி
உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!
தனிநபர் நல்லொழுக்கமும்
பள்ளிவாசல்களும்
மக்கள் அங்கத் தூய்மை
பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை
உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத்
தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது ஏனைய மக்களோடு
ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து
பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.
ஒவ்வொரு
வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும்
கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு
முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை
நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.
--------------------