இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 18 ஏப்ரல், 2024

இஸ்லாமிய வரலாற்றில் முதல் அறப்போர் (பத்ருப்போர்)

 (382) புனிதமான பத்ருப்போர்

**********************************************
அனஸ்(ரலி) அறிவித்தார். ஹாரிஸா இப்னு சுராகா(ரலி) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் வந்து, “இறைத்தூதர் அவர்களே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவரின் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வோன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த் தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றார்” என்று பதிலளித்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 2809
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நாங்கள் குறைஷிகளுக்கெதிராகவும் குறைஷிகள் எங்களுக்கெதிராகவும் (போர் வியூகம் அமைத்து) அணிவகுத்து நின்றபோது நபி(ஸல்) அவர்கள், “(குறைஷிகள்) உங்களை நெருங்கினால் நீங்கள் அம்புகளைப் பயன்படுத்துங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி .2900
. நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போரின் போது) ஒரு கூடாரத்தில் இருந்தபடி, “இறைவா! நான் உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் உன்னிடமிருந்து கோருகிறேன். இறைவா! உன்னுடைய நாட்டம் (முஸ்லிம்களாகிய) நாங்கள் தோற்றுப் போக வேண்டும் என்று) இருக்குமானால் இன்றைக்குப் பிறகு உன்னை வணங்குவது நின்று போய் விடும். (மக்கள் கற்பனையான பொய்க் கடவுள்களையே வணங்கிக் கொண்டிருப்பார்கள்)” என்று (முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தரும்படி) மன்றாடிப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு, “போதும், இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்“ என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடை அணிந்திருந்தார்கள். பிறகு “இந்த (இறைமறுப்பாளர்) படை விரைவில் தோற்கடிக்கப்படும்; மேலும், இவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். ஆயினும், இவர்களின் (கணக்கைத் தீர்த்திட) வாக்களிக்கப்பட்ட நேரம் மறுமை நாளாகும். மறுமை நாளோ மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதும் ஆகும்” என்னும் திருக்குர்ஆன் வசனத்தை (திருக்குர்ஆன் 54:45, 46) ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். மற்றோர் அறிவிப்பில், “பத்ருப் போரின் போது” என்னும் வாசகம் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
ஷஹீஹ் புகாரி 2915
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் கஅபாவின் நிழலில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபூ ஜஹ்லும் குறைஷிகளில் சிலரும் (ஒட்டகத்தின் கருப்பைச் சவ்வுகளைக் கொண்டு வரும்படி) உத்தரவிட்டார்கள். அப்போது மக்காவின் ஒரு பகுதியில் ஒட்டகம் ஒன்று அறுக்கப்பட்டிருந்தது. (அதை எடுத்து வர அவர்கள்) ஆளனுப்பினார்கள். பின்னர், அதன் கருப்பைச் சவ்வை எடுத்து நபி(ஸல்) அவர்களின் (தோள்) மீது போட்டார்கள். அப்போது ஃபாத்திமா(ரலி) வந்து, அதை நபி(ஸல்) அவர்களின் மீதிருந்து அப்புறப்படுத்தினார்கள். அப்போது, நபி(ஸல்) அவர்கள், “இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். இறைவா! குறைஷிகளை நீ கவனித்துக் கொள். ஹாஷிமின் மகன் அபூ ஜஹ்லையும் உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, உபை இப்னு கலஃப் மற்றும் உக்பா இப்னு அபீ முஐத் ஆகியோரையும் (நீ தண்டித்து விடு)” என்று அவர்களுக்குக் கேடு நேரப் பிரார்த்தித்தார்கள். இவர்களை நான் (பின்னாளில்) பத்ரின் ஒரு பாழுங் கிணற்றில் கொல்லப்பட்டவர்களாக (எறியப்பட்டிருக்க)க் கண்டேன். அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்), “நபி(ஸல்) அவர்கள் கேடு நேரப் பிரார்த்தித்த ஏழாமவனின் பெயரை நான் மறந்து விட்டேன்” என்று கூறுகிறார்கள். அபூ இஸ்ஹாக்(ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், “அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா(ரஹ்), “உமய்யா அல்லது உபை“ என்று (ஐந்தாமவனின் பெயரை) சந்தேகத்துடன் குறிப்பிடுகிறார். ஆயினும், (அந்த ஐந்தாமவனின் பெயர்) “உமய்யா“ என்பதே சரியானதாகும்.
ஷஹீஹ் புகாரி 2934
அலீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் அவர்களையும் மிக்தாத் அவர்களையும் “நீங்கள் “ரவ்ளத்து காக்“ என்னுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. இறுதியில், நாங்கள் “ரவ்ளா“ எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), “கடிதத்தை வெளியே எடு” என்று கூறினோம். அவள், “என்னிடம் கடிதம் எதுவுமில்லை” என்று கூறினாள். நாங்கள், “ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்” என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணைவைப்போரிடையுள்ள பிரமுகர்கள் சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “ஹாத்திபே! என்ன இது?“ என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி), “இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவரசப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினேன். (அதனால் அவர்கள் கேட்டுக் கொண்ட படி இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் “இவர் உங்களிடம் உண்மை பேசினார்” என்று கூறினார்கள். உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்” என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், “இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை அல்லாஹ் பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களைப் பார்த்து, “நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்“ என்று கூறி விட்டிருக்கலாம்” என்றார்கள். ”என்ன (பலமான) அறிவிப்பாளர் தொடர் இது!” என்று இந்த நபிமொழியின் அறிவிப்பாளர் தொடரைக் கண்டு இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) (வியந்து) கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3007
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டு வரப்பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி(ஸல்) அவர்களின் பெரியதந்தை) அப்பாஸ்(ரலி) அவர்களும் (கைதியாகக்) கொண்டு வரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒரு சட்டையைத் தேடினார்கள். (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபையின் சட்டை அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப்பதைக் கண்டார்கள். அதையே அப்பாஸ்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் அணிவித்தார்கள். இதன் காரணத்தால் தான் அப்துல்லாஹ் இப்னு உபை (இறந்த பின்பு அவனு)க்கு நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையைக் கழற்றி அணிவித்தார்கள். ”அப்துல்லாஹ் இப்னு உபை, நபி(ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் ஓர் உபகாரம் செய்திருந்தான். நபி(ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்.
ஷஹீஹ் புகாரி 3008
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3026
அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்; பசித்தவனுக்கு உணவளியுங்கள்; நோயாளியை நலம் விசாரியுங்கள்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3046
. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை “அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்“ என்று கூறிவிட்டு, “இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3084
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருடைய தினத்தன்று (மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட தம் படையினரையும் மிகப்பெருந்தொகையினரான எதிரிகளையும் கண்ட) நபி(ஸல்) அவர்கள், “இறைவா! (மறுப்பாளர்களுக்கெதிராக எங்களுக்கு நீ வெற்றியளிப்பதாக நீ அளித்த) உன்னுடைய உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) கோருகிறேன். (இறைவா! இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இல்லாமல் போய்விடுவர்” என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கரத்தைப் பற்றிக் கொண்டு, “போதும் (இறைத்தூதர் அவர்களே!)” என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் (தாம் தங்கியிருந்த கூடாரத்திலிருந்து)” அந்தப் படையினர் தோற்கடிக்கப்படுவர். அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவர்” என்று (திருக்குர்ஆன் 54:45-வது குர்ஆன் வசன வாசகத்தைக்) கூறிக் கொண்டே வெளியேறி வந்தார்கள்.
ஷஹீஹ் புகாரி 3953
பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். நானும் இப்னு உமர்(ரலி) அவர்களும் பத்ருப்போரின்போது சிறுவர்களாகக் கருதப்பட்டோம். பத்ருப்போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரண்டு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.
ஷஹீஹ் புகாரி 3956
3957. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்த நபித்தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களின் தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம். மேலும், பராஉ(ரலி) கூறினார்: அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 64.
(நபிகளார் காலத்துப்)போர்கள்
3959. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். ”முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ருப் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களின் தோழாகளின் எண்ணிக்கையேயாகும். இறை நம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்.
ஷஹீஹ் புகாரி 3959
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா, அபூ ஜஹ்ல் இப்னு ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ருப் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.
ஷஹீஹ் புகாரி 3960
அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ”அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?“ என்று நபி(ஸல்) அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத்(ரலி) (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத்(ரலி) அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூ ஜஹ்ல் நீ தானே!” என்று கேட்டார்கள். ”நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா?“ என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.
ஷஹீஹ் புகாரி 3962
அபூ தர்(ரலி) அறிவித்தார். குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா உபைதா இப்னு ஹாரிஸ்(ரலி) ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா இப்னு ரபீஆ, உத்பா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே “இவர்கள் தங்கள் இறைவனது (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு பிரிவினர் ஆவர்” என்னும் (திருக்குர்ஆன் 22:19) இறைவசனம் அருளப்பட்டது.
ஷஹீஹ் புகாரி 3966
கைஸ் இப்னு உபாத்(ரஹ்) அறிவித்தார். ”இந்த வசனங்கள் (திருக்குர்ஆன் 22: 19, 20, 21) பத்ருப் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன...” என்று அபூ தர்(ரலி) (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுக் கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3968
. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்“ என்னும் (53-வது) அத்தியாயத்தை ஓதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி(ஸல்) அவர்கள் “ஸஜ்தா“ செய்தார்கள். அங்கிருந்த ஒரு கிழவனைத் தவிர மற்ற அனைவரும் நபி(ஸல்) அவர்களுடன் “ஸஜ்தா“ செய்தனர். அவன் ஒரு கை மண்ணை அள்ளித் தன்னுடைய நெற்றிக்குக் கொண்டு சென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (ஸஜ்தாவைக் கேலி செய்து) சொன்னான். பிறகு, அந்த மனிதன் இறைமறுப்பாளனாகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை கண்டேன்.
ஷஹீஹ் புகாரி 3972
அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார். பத்ருப் போர் (நடந்து முடிந்த) நாளில் நபி(ஸல்) அவர்கள், குறைஷித் தலைவர்களில் இருபத்தி நான்கு பேர்(களின் சடலங்)களை பத்ருடைய கிணறுகளில் அசுத்தமானதும், அசுத்தப்படுத்தக் கூடியதுமான (கற்களால் உட்சுவர் எடுக்கப்பட்ட) கிணறு ஒன்றில் தூக்கிப் போடுமாறு உத்தரவிட்டார்கள். (எதிரிக்) கூட்டத்தினர் எவரிடமாவது நபி(ஸல்) அவர்கள் போரிட்டு வெற்றி கண்டால் (போரிட்ட இடத்திலுள்ள) திறந்த வெளியில் மூன்று நாள்கள் தங்கிச் செல்வது அவர்களின் வழக்கமாக இருந்தது. பத்ர் முடிந்த மூன்றாம் நாள் தம் வாகன(மான ஒட்டக)த்தின் மீது அதன் சிவிகையை (ஏற்றிக்) கட்டுமாறு நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். எனவே, அதன் மீது அதன் சிவிகை கட்டப்பட்டது. பிறகு நபி(ஸல்) அவர்கள் (புறப்பட்டுச்) சென்றார்கள். அவர்களின் தோழர்களும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். நபி(ஸல்) அவர்கள் ஏதோ தம் தேவை ஒன்றிற்காகவே செல்கிறார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். இறுதியில், அந்தக் (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி(ஸல்) அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?“ என்று கூறினார்கள். உடனே (அருகிலிருந்த) உமர்(ரலி), “இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை” என்று கூறினார்கள். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கதாதா(ரஹ்) கூறினார்கள்: அவர்களை இழிவுபடுத்தி சிறுமைப் படுத்தி தண்டிப்பதற்காகவும், அவர்கள் (தமக்கு நேர்ந்துவிட்ட) இழப்பை எண்ணி வருந்துவதற்காகவும் நபி(ஸல்) அவர்களின் சொல்லைச் செவியேற்கச் செய்யும் முகமாக (அந்த நேரத்தில் மட்டும்) அல்லாஹ் அவர்களை உயிராக்கினான்.
ஷஹீஹ் புகாரி 3976
அபூ உஸைத்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பத்ருப் போரின்போது எங்களிடம், “(எதிரிகளான) அவர்கள் உங்களை நெருங்கி வந்தால் - அதாவது அதிக எண்ணிக்கையில் உங்களை அவர்கள் சூழ்ந்து கொண்டால் - அம்பெய்யுங்கள். (எதிரிகளை அம்பு தாக்காது என்றிருப்பின், வீணாக்கிவிடாமல்) உங்கள் அம்புகளை மிச்சப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
புகாரி 3985
. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார். நான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர். அந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், “என் பெரிய தந்தையே! அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்” என்று கூறினார். அப்போது நான், “என் சகோதரர் மகனே! அவனை என்ன செய்யப் போகிறாய்?“ என்று கேட்டேன். அதற்கு அவர், “அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்” என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார். அவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் “அஃப்ரா“வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர்.
ஷஹீஹ் புகாரி 3988
நபி(ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் வந்து, “உங்களிடையே பத்ருப்போரில் பங்கெடுத்தவரைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?“ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “(பத்ரில் கலந்து கொண்டோர்) முஸ்லிம்களில் சிறந்தவர்கள்” என்றோ அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையையோ கூறினார்கள். (உடனே) ஜிப்ரீல்(அலை) அவர்கள், “இவ்வாறுதான் வானவர்களில் பத்ருப்போரில் பங்கெடுத்தவர்கள் (எங்களில் சிறந்தவர்கள் என்று நாங்களும் கருதுகிறோம்)” என்று கூறினார்கள். இந்த ஹதீஸை பத்ருப்போரில் பங்கெடுத்தவரான ரிஃபாஆ இப்னு ராஃபிஉ அஸ்ஸுரகீ(ரலி) அவர்களிடமிருந்து அவர்களின் புதல்வர் முஆத் இப்னு ரிஃபாஆ(ரஹ்) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 3992
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், “இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 3995
ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார். பத்ருப்போரின்போது நான் உபைதா இப்னு ஸயீத் இப்னி ஆஸ் என்பவனைச் சந்தித்தேன். அவன் தன்னுடைய இரண்டு கண்களைத் தவிர வேறெதுவும் வெளியில் தெரியாத விதத்தில் தன் உடல் முழுவதையும் ஆயுதங்களால் மூடி மறைத்திருந்தான். அவன் “அபூ தாத்தில் கரிஷ்“ (மக்கள் பலம் மிக்கவன்) என்னும் குறிப்புப் பெயரால் அறியப்பட்டு வந்தான். (போர்க்களத்தில் அவன்) நான் “அபூ தாத்தில் கரிஷ்“ (என்று பெருமையாகச்) சொன்னான். நான் அவன் மீது ஈட்டியைப் பாய்ச்சி அவன் கண்களில் தாக்கினேன். உடனே அவன் இறந்துவிட்டான். ”நான் அவன் மீது என்னுடைய காலை வைத்து மிதித்து மிகவும் சிரமப்பட்டு அந்த ஈட்டியை இழுத்தெடுத்தேன். அதன் இரண்டு ஓரங்களும் வளைந்து போயிருந்தன” என்று ஸுபைர்(ரலி) சொன்னதாக ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அறிவித்தார். அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) கூறினார்: அந்த ஈட்டியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஸுபைர்(ரலி) அவர்களிடம் (இரவலாகக்) கேட்கவே, ஸுபைர்(ரலி) அதைக் கொடுத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது ஸுபைர்(ரலி) அதை (திரும்ப) எடுத்தார்கள். பிறகு அதை அபூ பக்ர்(ரலி) (இரவலாகக்) கேட்க, அதை அவர்களுக்கு ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். அபூ பக்ர்(ரலி) இறந்தபோது, அதனை உமர்(ரலி) (இரவலாகக்) கேட்டார்கள். அதனை ஸுபைர் அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்குக் கொடுத்தார்கள். உமர்(ரலி) இறந்தபோது அதை ஸுபைர் அவர்கள் எடுத்து (தம்மிடம் வைத்து)க் கொண்டார்கள். பிறகு அவர்களிடம் உஸ்மான்(ரலி) அதைக் கேட்க, அவர்களுக்கும் அதை ஸுபைர்(ரலி) கொடுத்தார்கள். உஸ்மான்(ரலி) கொலை செய்யப்பட்டபோது, அந்த ஈட்டி அலீ(ரலி) அவர்களி(ன் குடும்பத்திரி)டம் வந்தது. அதனை, ஸுபைர்(ரலி) அவர்களின் மகன் அப்துல்லாஹ், (அலீ - ரலி அவர்களின் பிள்ளைகளிடம்) கேட்டார்கள். அப்துல்லாஹ்(ரலி) கொல்லப்படும் வரையில் அது அவர்களிடமே இருந்து வந்தது.
ஷஹீஹ் புகாரி 3998
. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார். பத்ருப் போரில் பங்கெடுத்தவர்களின் (வருடாந்திர உதவித்) தொகை (நபர் ஒன்றுக்கு, தீனார்ஃதிர்ஹம்) ஐயாயிரம், ஐயாயிரமாக இருந்தது. உமர்(ரலி) (தம் ஆட்சிக் காலத்தின் போது), “(உதவித் தொகையை) மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகமாக்கித் தருவேன்” என்று கூறினார்கள்.
ஷஹீஹ் புகாரி 4022.
உவைஸ் மஸ்லஹி 🌹

ஞாயிறு, 31 மார்ச், 2024

ஐந்து கடமைகளில் சமத்துவமும் சகோதரத்துவமும்


இஸ்லாத்தை ஒரு மதம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் ஒரு கொள்கை சார்ந்த வாழ்வியல் என்று பார்க்கும்போதுதான் இன்று பரவலாக மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுள்ள காழ்ப்புணர்வுகள் அகலும். இதன் அருமை பெருமைகளும் இதன் தேவையும் புரியும். இன்று மனிதகுலத்திற்கு பெரிதும் தேவைப்படும் அமைதி என்பது இறைவன் வழங்கும் இந்த வாழ்வியலை மக்கள் ஏற்று வாழ முற்படும்போதுதான் ஏற்பட வழியுள்ளது. ஏனெனில் மனிதர்களுக்கிடையே சகோதரத்துவமும் சமத்துவமும் நிலைநாட்டப் படாதவரை அமைதி என்பது எட்டாக்கனியே!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பதும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்பதும் வெற்று முழக்கங்களாக இல்லாமல் நடைமுறைக்கு வரவேண்டுமானால் அதற்கான அஸ்திவாரம் ஏக இறைக் கொள்கையே! இறைவன் ஒருவன் மட்டுமே என்பதை உறுதியாக மக்கள் ஏற்றால் மட்டுமே மனித குல சமத்துவமும் சகோதரத்துவமும் சாத்தியப்படும். அதனால்தான்  இஸ்லாத்தின் தூண்கள் என்று அறியப்படும் ஐம்பெரும் கடமைகளில் முதல் கடமையாக இதை ஆக்கியுள்ளது.

1. சமத்துவம் பேணுவேன் என்பதற்கான உறுதிமொழியே கலிமா 

 ஒருவர் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமானால் “லா இலாஹ இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்” என்ற கலிமாவை (உறுதிமொழியை) மனதார ஏற்று வாயால் மொழிய வேண்டும், அவ்வாறு மொழிந்த பின்னர்தான்  அவர் “முஸ்லிம்”  என்று அறியப்படுகிறார். இந்த உறுதிமொழியின் பொருள் “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை மற்றும் முகமது நபி அவனுடைய திருத்தூதர்” என்பதாகும்.  இந்த வாசகத்தை மொழிவதன் மூலம் இனம், நிறம், இடம், மொழி போன்ற வேற்றுமைகளைக் கடந்து அனைத்துலகுக்கும் இரட்சகனான ஏக இறைவனை மட்டுமே வணக்கத்துக்குரியவனாகவும் அவனது தூதரை என் வாழ்க்கை வழிகாட்டியாகவும் ஏற்றுக்கொள்கிறேன் என்பதை அவர் உறுதிபட ஏற்கிறார்.

இதை ஏற்ற மாத்திரத்திலேயே அவர் பலதெய்வ வழிபாடு, ஆள் தெய்வ வழிபாடு, உருவ வழிபாடு போன்ற அனைத்துக் வித வழிபாடுகளில் இருந்தும் அவற்றோடு இணைந்த மூட நம்பிக்கைகளில் இருந்தும் சடங்குகளில் இருந்தும் இடைத்தரகர்களின் பிடியில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விலகி பரிசுத்தமாகி விடுகிறார்.

கலிமா என்ற இந்த உறுதிமொழிக்கு அடுத்ததாக ஐவேளைத் தொழுகை நிறைவேற்றல் இஸ்லாமிய மார்க்கத்தில் அடுத்த கடமையாகும்.

2. சமத்துவத்தில் சகோதரத்துவத்தில் தொழுகையின் பங்கு  

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதில் மனிதன் தன் ஆசாபாசங்களுக்கும் மனோ இச்சைக்கும் உட்பட்டு காலப்போக்கில் கொண்ட கொள்கையில் இருந்து விலகிவிட வாய்ப்புகள் தாராளம் உள்ளன. எனவே இஸ்லாம் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க இறைவனால் ஏவப்பட்ட கடமையே தொழுகை என்பதை ஆராய்வோர் அறியலாம். அன்றாடம் ஐவேளை இறைவனின் தொடர்பையும்  நினைவையும் புதுப்பிக்கும் நடவடிக்கை தொழுகை. உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை உணர்வும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது. இந்தத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும் போது சமூகத்தில் சமத்துவமும் சகோதரத்துவமும் வலுவடைகிறது.   தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நெருக்கமாக அன்றாடம் தொழுகைக்காக நிற்கும்போது தீண்டாமை, தாழ்வு மனப்பான்மை, உயர்வு மனப்பான்மை, செருக்கு போன்ற தீய பண்புகள் மனித உள்ளங்களில் இருந்து களையப்படுகின்றன.

3. நோன்பின் மாண்பு

நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி. இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும் இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.

4. வறுமை ஒழிப்பில் ஜகாத்

செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. செல்வந்தர்கள் தமக்கு வாய்த்த செல்வத்தின் மூலம் சக மனிதனின் துயர் துடைக்கும் நடவடிக்கையே ஜகாத்!

5. ஹஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!

போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்.  இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும். ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ் என்ற கடமை!

===================== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்


வெள்ளி, 29 மார்ச், 2024

தொழுகைக்கான அழைப்பின் அற்புதங்கள்


அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் 

ஒரு நாளைக்கு ஐந்து முறை, உங்களுக்கு அருகிலுள்ள பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் இருந்து இந்த வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். இதை அரபு மொழியில் அதான் என்பார்கள். தமிழ் இஸ்லாமிய வழக்கில் இது 'பாங்கு' என்று சொல்லப்படும். ஐவேளைத் தொழுகை இஸ்லாத்தில் கடமை என்பதையும் அவற்றை இஸ்லாமியர்கள் அந்தந்த நேரங்களில் ஆங்காங்கே உள்ள பள்ளிவாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவதையும் அறிவீர்கள். உண்மையில் அதான் அல்லது பாங்கு என்பது பள்ளிவாசலில் நடைபெற உள்ள அந்த நேரத் தொழுகைக்கான அழைப்பே.

அதான் எப்படி தொடங்கியது?

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் காலத்தில், தொழுகைக்கு மக்களை எப்படி அழைப்பது என்பது குறித்து தன் தோழர்களோடு கலந்தாலோசனை நடத்தினார்கள்.  நபித்தோழர்கள் பலரும் பல ஆலோசனைகளை முன்வைத்தார்கள்.  சிலர் மணி அடிக்க வேண்டும் என்றும், சிலர் சங்கு ஊதலாம் என்றும், சிலர் தீ மூட்டி மக்களை அழைக்கலாம் என்றும் ஆலோசனைகள் தந்தனர். இறைவனின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து நபிகளார்  “மனித குரலை” தொழுகைக்கான அழைப்பிற்கு  பயன்படுத்தத் தேர்ந்தெடுத்தார். 

நபிகளார் மனிதக் குரலை விட அதிக சத்தமாக ஒலிக்கும் மணியையோ, சங்கையோ அல்லது தூரத்தில் இருந்தே கண்ணிற்கு தெரியும் நெருப்பையோ தேர்ந்தெடுக்கவில்லை என்பதை நீங்கள் இங்கு கவனிக்கலாம். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார் என்று நீங்கள் கேட்கக்கூடும். மனிதக் குரல் மூலம் கொடுக்கப்படும் தொழுகைக்கான அழைப்பு என்பது அதைச் சொல்பவருக்கும் (அழைப்பவருக்கும்)  அதைக் கேட்பவருக்கும் (அழைக்கப் படுபவருக்கும்) ஒரு மிகப் பெரிய ஆன்மீக அனுபவமாக அமைவதை நீங்கள் பார்க்கலாம்.

பாங்கு வாசகங்களின் பொருள்:

அல்லாஹு அக்பர் - இறைவன் மிகப் பெரியவன் (நான்கு முறை)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பதை அறிவீர்கள்)

அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனே அனைத்துக்கும் மேலானவன் என்கிறது இந்த முழக்கம். அனைத்துலகும் அவற்றில் உள்ள படைப்பினங்களும் நமக்கு உணவளித்துக் கொண்டிருக்கும் வாழ்வாதாரமும் என அனைத்தும் அந்த வல்லோனுக்கே சொந்தம், எனவே அவனது அழைப்பான இந்த அதானுக்கு அல்லது பாங்குக்கு பதிலளிப்பீராக என்ற நினைவூட்டுகிறது இந்த வாசகம். 

அவனுக்கு அடிபணிந்து வாழ்வதே நம் வாழ்வின் தலையாய நோக்கம் என்ற உணர்வைப் பெறுவோர் உடனடியாக தாங்கள் செய்து கொண்டிருக்கும் தொழிலையும் வியாபாரத்தையும் தற்காலிகமாக இடைவெளி கொடுத்துவிட்டு தொழுகையில் பங்கு பெறுகிறார்கள். 

கீழ்கண்ட வாசகங்கள் ஒவ்வொன்றும் இருமுறை சொல்லப்படும்:

அஷ்ஹது  அன் லா இலாஹ இல்லல்லாஹ் -  வணக்கத்திற்கும் கீழ்ப்படிதலுக்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நான் சாட்சி கூறுகிறேன்.

அதாவது நான் அவனது படைப்பினங்களையோ மனிதர்களையோ மனிதர்கள் சமைத்த சிலைகளையோ உருவங்களையோ அல்லது சமாதிகளையோ வணங்க மாட்டேன். மாறாக படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்குரியவன் என்று உறுதி கூறுகிறேன் என்பதாக இதன் பொருள் விரியும். 

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - முஹம்மது இறைவனின் இறுதித்தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்

படைத்த இறைவன் யாரை இந்தக் காலத்துக்கு தன் தூதராக அனுப்பியுள்ளானோ அவரை என் வாழ்க்கை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று இதன் பொருள் விரியும். 

மேற்கண்டவை இரண்டும் இஸ்லாத்தின் கொள்கைப் பிரகடன வாசகங்களாகும். ஐவேளையும் இந்த உறுதிமொழி நமக்கு நினைவூட்டப்படுகிறது. இஸ்லாம் 

ஹய்யா அல்-ஸலாஹ் - தொழுகைக்கு வாருங்கள்

ஹய்யா அல் ஃபலாஹ் - வெற்றிக்கு வாருங்கள்

உண்மையில் இவை இரண்டும்தான் தொழுகைக்கான அழைப்பு வாசகங்களாகும். அதாவது இந்தப் பரீட்சை வாழ்வில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வோர்தான் வெற்றி ஈட்டுவார்கள். அவ்வாறு கட்டுப்பட்டு வாழ்தலே இஸ்லாம் எனப்படும். நீங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறீர்களா இல்லையா என்பதை உரசிப் பார்க்கும் செயல்தான் ஐவேளைத் தொழுகை. 

அல்லாஹு அக்பர் – இறைவன் மிகப்பெரியவன்.

லா இலாஹ இல்லல்லாஹ்- வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்தவன் அல்லாஹ் மட்டுமே. – (இந்த வாசகம் ஒரு முறை மட்டுமே சொல்லப்படும்)

பாங்கின் முக்கியத்துவம்:

பாங்கின் முக்கியத்துவம் அறிய சமூகத்தில் தொழுகையை நிலைநாட்டுவதன் அவசியம் பற்றி அறிவது நலம்.

இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை என்றும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடம் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இதில் இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு இந்த உலக வாழ்கையும் அமைதிகரமாக அமைகிறது. மறுமையில் அவர்களுக்கு சொர்க்கமும் பரிசாகக் கிடைக்கிறது. இதை மறுப்பவர்களுக்கு இவ்வுலகில் அமைதியின்மையும் மறுமையில் நரகமும் வாய்க்கிறது என்பது இஸ்லாமிய போதனை.

அந்த வகையில் இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ முற்படுபவர்களுக்கு இறைவன் ஐந்து வேளைத் தொழுகைகளைக் கடமையாக்கி உள்ளான். அந்தத் தொழுகைகளை முடிந்தவரையில் கூட்டாக நிறைவேற்றவும் இஸ்லாம் பரிந்துரைக்கிறது. இதன்மூலம் தனிநபர் வாழ்விலும் சமூக வாழ்விலும் பற்பல  நன்மைகள் உண்டாகின்றன.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்றுவிட்டனர். அவர்கள் எத்தகையோர் என்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள். (திருக்குர்ஆன் 23:1,2,9)

தனி நபர்களை ஆன்மீக அடிப்படையில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுபவர்களாக ஆக்குகின்றன.

நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிட முடிகிறது.

கூட்டாகத் தொழும்போது சகோதரத்துவ மற்றும் சமத்துவ உணர்வு வலிமையாகத் தூண்டப்படுவதால் தீண்டாமை நிறபேதம், இனபேதம் மொழி பேதம் போன்றவை அடியோடு ஒழிகின்றன.

சமூகத்தில் ஏழைகளும் பணக்காரர்களும் அன்றாடம் ஓரணியில் சங்கமிப்பதால் ஏழைகளின் துயர் துடைப்பு, இன்ன பிற நலத்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

தொழுகை பேணும் சமூகம் உருவாகும்போது மது, சூதாட்டம் போன்ற சமூகத் தீமைகள் அங்கு வேரூன்ற விடாமல் தடுக்கப்படுகின்றன.

================ 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

இனவெறிக்கு துணைநின்ற நாத்திகம்!

 = மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும்தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

ஒரே ஒரு மனித ஆண்-பெண் ஜோடியில் இருந்துதான் மனித குலம் உருவாயிற்று என்ற உண்மையை இஸ்லாம் உறுதிபடச் சொல்கிறது. உலகில் பரவியுள்ள அனைத்து மனிதர்களும் ஒரே போல உடலமைப்பையும் இயற்கையையும் பெற்றிருப்பதே இதற்கு மாபெரும் சான்றாக விளங்குகிறது. இதுதான் மனித சமத்துவத்துக்கும் உலகளாவிய சகோதரத்துக்கும் அடிப்படை ஆதாரம்.

ஒருபுறம் கடவுளின் பெயரால் சிலர் இனவெறியும் தீண்டாமையும்  விதைத்துக்கொண்டிருக்க மறுபுறம் நாத்திகமும் தன் அறியாமைக் கொள்கைகளின் காரணமாக மனித சமத்துவத்தை மறுத்தது. உறுதியான ஆதாரங்கள் அறவே ஏதும் இல்லாத  பரிணாமவியல் என்ற ஊகக் கோட்பாட்டை அறிவியல் என்ற பெயரில் போதித்தது அது. அதன்படி இவ்வுண்மையை மறுத்து குரங்கில் இருந்துதான் மனிதன் உருவானான் என்ற ஆதாரமற்ற ஊகத்தைப் பரப்பியது.

கொடூர விளைவுகள்:


 அதனால்  வரலாற்றில் உண்டான விளைவுகள் கொஞ்ச நஞ்சமல்ல! ஒவ்வொரு இனத்துக்கும் மூதாதையர் குரங்குகள் வேறுவேறு என்ற காரணம் காட்டி மனிதனின் தோற்றம், நிறம், கலாச்சாரம் போன்றவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் வழக்கமும் உருவானது. பல்லாயிரக்கணக்கான மக்களை அது காவுகொண்டது. உதாரணமாக ஹிட்லர் தன் நாஜி இனமே உலகில் மற்றெல்லாவற்றையும் விட உயர்ந்தது என்று கூறி மற்ற நாடுகளை அடிமைபடுத்தவும் மக்களைக் கொன்று குவிக்கவும் செய்தார். கருப்பர்கள் (நீக்ரோக்கள்) ஒருபோதும் வெள்ளை இனத்தாருக்கு சமமாக முடியாது என்று சொல்லி அவர்களை தாழ்த்தி வைக்கவும் செய்தார்.

கொஞ்சநஞ்சம் மக்களிடம் இருந்து வந்த இறையச்சம் என்ற பொறுப்புணர்வை அறவே துடைத்தெறிந்தது நாத்திகம். யாருக்கு எந்தக் கொடுமைகள் செய்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற உணர்வை ஆதிக்க சக்திகளுக்குள் அது புகுத்தியது. ஆயுத ஆதிக்கம் வாய்த்த  வெள்ளையர்கள் அவர்கள் பிடித்தெடுத்த கண்டங்களில் வாழ்ந்து கொண்டிருந்த பழங்குடியினரை ஈவிரக்கமின்றி கொன்று குவிப்பதற்கும் ஆப்பிரிக்கக் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த கறுப்பின


மக்களை ஆயுத முனையில் கீழடக்கி அமேரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்திச்சென்று அடிமை வாணிபம் செய்ததற்கும் நாத்திகக் கொள்கை உருவாக்கிய மனோநிலை பெரிதும் துணைபோயிருக்கிறது என்பதே உண்மை.

இறைவனின் எச்சரிக்கை

இறைவனின் பெயரால் இனவெறி கடைபிடித்த ஆத்திகர்களாயினும் சரி இறைமறுப்பை கைகொண்டு இனவெறி பாராட்டிய நாத்திகர்களாயினும் சரி அவர்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி இறுதித் தீர்ப்பு நாளன்று இறைவன் முன்னால் விசாரிக்கப்பட உள்ளார்கள் என்பது மட்டும் உறுதி. இறைவன் கற்பித்த மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மறுத்து சக மனிதனின் உரிமைகளை சூறையாடிய ஆத்திகர்களுக்கும் நாத்திகர் களுக்கும் கடுமையான தண்டனைகள் இறைவனிடம் உள்ளன.

= வரவிருக்கும் அந்நாளில் (ஏற்படக்கூடிய அவமானத்திலிருந்தும் தண்டனைகளிலிருந்தும்) நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ளுங்கள்! அன்று இறைவனின் பக்கம் நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் சம்பாதித்தவற்றிற்கான (நன்மை அல்லது தீமைக்கான) கூலி முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும் எவர் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. (திருக்குர்ஆன் 2:281)

= “நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள். எந்தளவுக்கென்றால், கொம்பில்லாத ஆட்டுக்காக (அதை முட்டிய) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும்” (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 5038).

= “மறுமை நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் நாம் கொண்டுவருவோம். கணக்கெடுக்க நாமே போதும்”. (திருக்குர்ஆன் 21:47)

=============== 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?
இதயங்களை வென்ற இறைத்தூதர்

புதன், 27 மார்ச், 2024

வணக்கத்துக்குரியவன் இறைவன்றி வேறு யார்?

இஸ்லாம் என்ற இறைதரும் வாழ்வியல் கொள்கையின் முக்கிய அடிப்படை இதுதான். மக்கள் படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களையோ அல்லது மனிதர்களாகவே உருவாகிக் கொண்ட கற்பனை உருவங்களையோ வணங்கக் கூடாது. அவ்வாறு வணங்கும்போது ஏற்படும் குழப்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல..
- இறைவனைப் பற்றிய மரியாதை உணர்வு அகன்று விடுவதால் இறையச்சம் என்ற பொறுப்புணர்வு மனித மனங்களில் இல்லாமல் ஆகி விடுகிறது. சமூகத்தில் பாவங்கள் அதிகரிக்க இது முக்கிய காரணியாகி விடுகிறது. 
- பல்வேறு கடவுளர்கள் கற்பிக்கப்படுவதால் அதைப் பொறுத்து ஒரே மனித குலத்தில் பிளவுகள் உண்டாகுதல், ஜாதிகள் மற்றும் தீண்டாமை போன்றவை உருவாகுதல். 
- கடவுளின் பெயரால் மூட நம்பிக்கைகள், சுரண்டல்கள் போன்றவை உருவாகுதல். 

ஆனால் உண்மைக் கடவுளை எவ்வாறு அறிவது? 

அதற்கு இறைவேதம் திருக்குர்ஆன் படைப்பினங்களையும் அவற்றின் செயல்பாடுகளையும், நாம் அன்றாடம் அனுபவிக்கும் அத்தியாவசியமான அருட்கொடைகளையும்  பகுத்தறிவு கொண்டு சிந்தித்து படைத்தவனை அறிந்து அவனுக்கு நன்றி கூறும் முகமாக அவனை வணங்குமாறு கற்பிக்கிறது. அப்படிப்பட்ட ஏராளமான வசனங்களை நீங்கள் திருக்குர்ஆனில் காணலாம். உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்: 

 வானங்கள், பூமி, மழை, மரங்கள், தோட்டங்கள்:
27:60. அன்றியும், வானங்களையும் பூமியையும் படைத்து, உங்களுக்கு வானத்திலிருந்து மழையை இறக்கி வைப்பவன் யார்? பின்னர் அதைக் கொண்டு செழிப்பான தோட்டங்களை நாம் முளைக்கச் செய்கிறோம். அதன் மரங்களை முளைக்கச் செய்வது உங்களால் முடியாது. (அவ்வாறிருக்க) அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! ஆயினும் அவர்கள் (தம் கற்பனை தெய்வங்களை அல்லாஹ்வுக்கு) சமமாக்கும் மக்களாகவே இருக்கிறார்கள்.
பூமி, ஆறுகள், மலைகள், கடல்கள்,தடுப்பு 
27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்; அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர்.
பிரார்த்தனைக்கு பதில், துன்பம் நீக்குதல்
27:62. கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்.
இருள்களில் வழிகாட்டல், மழைக்கு முன் நற்செய்தி கூறும் காற்று: 
27:63. கரையிலும் கடலிலுமுள்ள இருள்களில் உங்களை நேரான வழியில் செலுத்துபவன் யார்? மேலும், தன்னுடைய “ரஹ்மத்” என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் (கூறுவன) ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? - அவர்கள் இணை வைப்பவற்றைவிட அல்லாஹ் மிகவும் உயர்வானவன்.
இல்லாமையில் இருந்து படைபைத் துவங்குதல், இனப்பெருக்கம், படைப்பினங்களுக்கு உணவளித்தல்,  
27:64. முதன் முதலில் படைப்பைத் துவங்குபவனும், பின்னர் அதனை மீண்டும் உண்டாக்கி வைப்பவனும் யார்? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு ஆகாரம் அளிப்பவன் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (நபியே!) நீர் கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், உங்களுடைய ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள்.”

பகுத்தறிவு கொண்டு நேர்மையாக சிந்திக்கும் போது இவ்வுலகைப் படைத்த அந்த ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் எந்த சக்தியும் இவற்றை நிகழ்த்தவில்லை என்பதை அறியலாம். உண்மை இப்படி இருக்க படைத்தவன் அல்லாதவற்றை இறைவன் என்று சொல்வதும் அவற்றை வணங்குவதும் முற்றிலும் அறியாமையே! இது படைத்தவனுக்கு செய்யும் மாபெரும் நன்றிகேடாகும். 
"நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” (திருக்குர்ஆன் 31:13)
இந்த நன்றிகேட்டிற்கு இறைவனிடம் கடுமையான தண்டனை உண்டு என்கிறது திருக்குர்ஆன். 
இறைமறுப்பாளர்களின் அறிவற்ற வாதம் 
ஆனால் இந்த அப்பட்டமான உண்மையை பகுத்தறிவு என்ற பெயரில் மறுக்கும் செயல்தான் ஆச்சரியமானது. 
சில "பகுத்தறியா வாதிகள்" இயற்கைதான் இதைச் செய்கிறது என்று காரணம் கூறுவதை நீங்கள் காணலாம். ஆனால் இயற்கை என்ற கற்பனைப் புனைவுக்கு சாதாரண மனிதர்களுக்கு இருக்கும் பகுத்தறிவோ ஆற்றலோ கூட எதுவும் கிடையாது என்பதை சிந்தித்தாலே இது ஒரு பொய்யான வாதம் என்று உணரலாம். இவர்களைப் பார்த்து இறைவன் கேட்கும் கேள்விகள் இவை: 
52:35. அல்லதுஅவர்கள் எந்தப் பொருளின்றியும் (தாமாகவே) படைக்கப்பட்டனராஅல்லது அவர்கள் (எதையும்) படைக்கிற (சக்தியுடைய)வர்களா?
52:36. அல்லதுவானங்களையும் பூமியையும் அவர்கள் படைத்தார்களா? ......
--------------------------------------------------
56:57. நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா?
56:58. (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
56:59. அதை நீங்கள் படைக்கிறீர்களாஅல்லது நாம் படைக்கின்றோமா?
56:60. உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்எனவே நம்மை எவரும் மிகைக் முடியாது.
56:61. (அன்றியும் உங்களைப் போக்கி விட்டு) உங்கள் போன்றோரை பதிலாகக் கொண்டு வந்து நீங்கள் அறியாத உருவத்தில் உங்களை உண்டாக்கவும் (நாம் இயலாதவர்கள் அல்ல).
================= 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!
நாம் ஏன் பிறந்தோம்?

திங்கள், 25 மார்ச், 2024

சமத்துவம் பூக்கும் சோலைகளே பள்ளிவாசல்கள்


 ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தையும் யாதும் ஊரே யாவரும் உறவே என்ற முழக்கத்தையும் பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்கள் மட்டுமே!   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், எளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழும் இடம் பள்ளிவாசல். படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!

பள்ளிவாசல்கள் என்றால் என்ன?

படைத்த இறைவனை பலரும் கூட்டாக சேர்ந்து நின்று தொழுவதற்காக காட்டப்படும் ஆலயமே  பள்ளிவாசல் என்பது. அங்கு வருவோர்  கை,  கால், முகம் இவற்றை கழுவுவதற்கு வசதியாக தண்ணீர் தொட்டியோ குழாய்களோ முன்னால் காணப் படும். உள்ளே நீங்கள் சென்று பார்த்தீர்களானால், உருவப் படங்களோ, சிலைகளோ எதுவுமே இராது. தரையில் பாய் விரிக்கப் பட்டு இருக்கும், சுவர்களில் எந்த வகையான சித்திரங்க இல்லாமல் காலியாக இருக்கும். 5 வேளைகளிலும் தொழுகைக்கான அழைப்பு  ஒலிபெருக்கி மூலம் விடப்படுகிறது.   இதைச் செவியுறும் ஆங்காங்கே உள்ள முஸ்லிம்கள் உடனடியாக தொழுகைக்கு விரைவார்கள். அனைவரும் வந்ந்து சேர்ந்ததும் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் அணிவகுத்து நிற்பார்கள்.

தொழுகையாளிகளில் குரான் அதிகம் அறிந்தவர் அணிவகுப்பில் தளபதியைப்  போல் முன் நின்று தொழுகையை நடத்துவார். அவருக்கு அரபு மொழியில் இமாம் என்று கூறுவர். மற்றவர்கள் அவர் செய்வதைப் போலவே செய்து தொழுகையை நிறைவு செய்வார்கள். தொழுகை முடிந்ததும் தத்தமது இருப்பிடங்களுக்கும் அலுவல்களுக்கும் திரும்புவார்கள். இங்கு காசு, பணம், காணிக்கை,பழம், பூ போன்ற எந்த செலவுகளுக்கும் இடமில்லை. பொருட்செலவு இல்லாத சடங்குகள் இல்லாத - இறைவனை நேரடியாக வணங்குவதற்கு உரிய இடம் பள்ளிவாசல்

சமத்துவமும் சகோதரத்துவமும்

சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும். ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது. ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.

நபிகள் நாயகம் இஸ்லாத்தை போதிக்க ஆரம்பித்ததன் பின் உலகில் நடந்துள்ள மாற்றங்களைப் பாருங்கள். உலகெங்கும் வாழும் முஸ்லிம்களை எடுத்துக் கொள்ளுங்கள், உதாரணமாக இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இவர்கள் யாருமே அரபு நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களோ நபிகள் நாயகத்தின் வாரிசுகளோ அல்ல. இவர்கள் இதற்கு முன் இந்துக்களாகவோ கிறிஸ்துவர்களாகவோ இருந்து இஸ்லாத்தை வாழ்வியலாக ஏற்றுக்கொண்டவர்களின் தலைமுறையினர்தான். இவர்கள் இந்த ஏக இறைகொள்கையை ஏற்றுக் கொண்டபின் என்னென்ன புரட்சிகள் நடந்துள்ளது பாருங்கள். இன்று இவர்களுக்கு ஜாதிகள் இல்லை. இவர்களிடையே தீண்டாமை இல்லை. ஒரு காலத்தில் தீண்டாமையால் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று சிதறுண்டு கிடந்தார்கள். இம்மக்களை இன்று பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒரே அணியில் தோளோடு தோள் நிற்க வைப்பதும் ஒரே தட்டில் பாகுபாடின்றி உண்ண வைப்பதும் இந்த ஓரிறைக்கொள்கை நிகழ்த்தி வரும் அற்புதங்களே!

தனிநபர் நல்லொழுக்கமும் பள்ளிவாசல்களும்

மக்கள் அங்கத் தூய்மை பேணி தினசரி ஐந்து வேளைகள் இறைவன் முன்னால் பயபக்தியோடு நின்று தொழும்போது இறை உணர்வு அவ்வப்போது புதுப்பிக்கப்படுவதால் மது போதை மட்டுமல்ல, மற்றெந்த பாவங்களின் பக்கமும் மனம் ஈர்க்கப்படுவதில்லை. மேலும் இந்தத் தொழுகைகளை அவ்வப்போது பள்ளிவாசல்களில் ஒன்று கூடி நிறைவேற்றும்போது ஏனைய மக்களோடு ஏற்படும் சகோதரத்துவ உணர்வும் தொடர்ச்சியான நல்லோர் சகவாசமும் பாவங்களில் இருந்து பாதுகாக்கும் வலுவான அரணாக அமைகின்றன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குளிப்பதையும் அன்று மதியம் பள்ளிவாசல்களில் ஜும்ஆ எனப்படும் கூட்டுதொழுகையில் கலந்து கொள்வதையும் கட்டாயமாக்கி உள்ளது இஸ்லாம். தொழுகைக்கு முன் நடத்தப்படும் திருக்குர்ஆன் மற்றும் நபிமொழி போதனையும் மனிதனை நல்வழிப்படுத்துபவையாக உள்ளன.

-------------------- 

இஸ்லாம் என்றால் என்னமுஸ்லிம் என்றால் யார்?
அல்லாஹ் என்றால் யார்?
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
இதைப் படிக்காவிட்டால் இழப்புபேரிழப்பு!

நாம் ஏன் பிறந்தோம்?