இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஜூன், 2017

கன்றின் தாயே உன் கதை என்ன?


இந்த நாட்டில் வாயில்லா ஜீவன்கள் பலர் வாழ்கிறார்கள்..... அவை பசுக்கள் அல்ல... ஆனால் அவற்றைக் கொண்டு தன் வயிற்றை கழுவி வாழும் ஏழை குடியானவர்கள்... இவர்களுக்கு சங்கங்கள் கிடையாது.. இவர்களின் உரிமை கேட்டு போராடவோ இவர்களுக்காக குரல் கொடுக்கவோ எந்த அரசியல் கட்சிகளும கிடையாது. மிகவும் திக்கற்றவர்கள் இவர்கள்! இவர்களை மனதில் வைத்துக்கொண்டு பின்வரும் பசுவின் கதையை கொஞ்சம் கேளுங்கள்... (நன்றி: சகோ. Mohamed Ashik)
பெண்பால் மாடு... பசு எனப்படுகிறது.
சிறுவயதில் பெண்பால் மாட்டுக்கு பெயர் கன்றுக்குட்டி.
கன்றுக்குட்டி பால் தராது.
ஆனால், பின்னர் ஒரு நாள் அது வயசுக்கு வரும்.
காளை மாட்டுடன் உடலுறவு கொள்ளும்.
அதாவது, காளை மாட்டை உடலுறவு கொள்ள அனுமதிக்கும்.
அதன் பின்னர் பெண்பால் மாடு கருவுறும். சினை கொண்ட பெண்பால் கன்றுக்குட்டிக்கு இனி #பசு என்று பெயர்.
இதன் பின்னர், பசு கன்று ஈனும், அதன் பின்னர் அதிகமதிகம் பசுவின் மடியில் பால் சுரக்கும். ஈன்ற கன்றுக்கு வயிறு நிரம்ப பால் புகட்டியது போக... பசுவின் மடியில் மிக அதிகமாகவே பால் சுரந்து இருக்கும். இது... மனித குலத்துக்கு இறைவனின் அருட்கொடை. அந்த எக்சஸ் மில்கை...... மனிதன் கறந்து பாலாக காய்ச்சி... அப்படியேவோ.... அல்லது தேயிலை சேர்த்தோ... காப்பி பொடி போட்டோ குடிக்கிறான். ஊட்டச்சத்து பெறுகிறான்.
இப்படியாக பால் கொடுக்கும் வரைக்கும் பசு அனைவராலும் போற்றப்படும். கோமாதா என்று ஹிந்துக்களால் சாமியாக கும்பிடப்படும்.
இந்த பால் கொடுக்க ஆரம்பித்த பசுதான்... சந்தையில் அதிக விலைக்கு போகும். மாடுதன் ஆயுளில்... இப்போதுதான் அதன் விலை உச்சத்தில் இருக்கும். வயது மற்றும்... முதல் கன்று ஈன்ற பருவம்... மற்றும் மடியில் பால் வரத்தின் அடிப்படையில் பசு 30,000 ரூபாய் தாண்டி எல்லாம் சர்வசாதாரணமாக சந்தையில் விலை போகும்.
இந்நேரத்தில்... நிறைய தீவனம் போட்டு அதிக பால் கறக்கும் பால் பண்ணை காரர்களை தவிர வேறு யாரும் அவ்வளவு விலை கொடுத்து பசுவை வேறு எந்த நோக்கத்துக்காகவும் வாங்க மாட்டார்கள். மனிதன் முட்டாள் அல்ல.
வயது ஆக ஆக பால் சுரத்தல் பசுவுக்கு குறையும். பின்னர் ஒரு நாள் அந்த கிழப்பசு அறவே பால் தராது. ஆனால், தீவனம் மட்டும் தின்னும். ஏனென்றால் பசு உயிர் வாழ அதற்கு உணவு அவசியம். 
#பால்_தராத_பசுக்கு எந்த பால் பண்ணை காரரும் #தீவனம்_மட்டும் போட்டு உயிர் காப்பாற்றி பண்ணையில் ஊட்டமாக காட்டி மியூசியம் போல வைத்து இருந்து நஷ்டப்பட விரும்ப மாட்டார்.
இவர்தான் ஏற்கனவே பால் வரத்து அதிகமாக இருந்த காலத்த்தில் அதிக பால் கறந்து அதிக இலாபம் பார்த்து விட்டாரே.
எனவே, ஒரு பசு குறைவாக பால் தரும் போதே, பசுவின் வயதை கண்டு பிடிக்க தெரியாத ஏதாவது இளிச்ச வாய அனுபவமற்ற சிறு குறு சைக்கிள் பால்காரரிடம் பாதி விலைக்கோ அல்லது வந்த வரை இலாபம் என்றோ ரூபாய் 10,000 க்கு கூட விற்றுவிடுவார்.
அப்படி அந்த பசுவை குறைந்த விலைக்கு வாங்கியவர்... தினமும் சில லிட்டர் பால் கறந்து... அந்த பசு சுத்தமாக ஒருநாள் சொட்டு பால் கூட தராமல் போனதும்... அவருக்கும் அதே நிலை. நஷ்ட நிலை. என்ன செய்வார்...? தீவனம் போடாமல்... 'எங்காவது புல்லு மேய்ஞ்சு உயிர் வாழ்ந்துக்கட்டும்' என்று பசுவை - கோமாதாவை - அடித்து துரத்தி விட வேண்டும். இது அவருக்கு நஷ்டம் அல்லவா..? இப்படி எந்த முட்டாளும் செய்ய மாட்டார்.
அல்லது... இறைச்சிக்காக கசாப்பு கடையில் ஒரு நல்ல தொகைக்கு விற்க வேண்டும். விற்றால்... அடுத்த பசு வாங்க அது மூலதனமாக அமையும். இது இலாபம். இது மட்டுமே இப்போது அந்த பால் தராத பசுவால் வரும் இலாபம். இப்படித்தான் எல்லா மனிதர்களும் எல்லா நாட்டிலும் செய்வர்.
பொதுவாக குறைவான அடிமாட்டு விலைக்கே இந்த பால் தராத பசு இறைச்சி கடையில் விற்கப்படும். அதாவது, இரண்டு மூன்று ஆடுகளின் எடைக்கு எடை நிகராக உள்ள பால் தரா பசு... ஒரு ஆட்டின் விலைக்குத்தான் போகும். ஏனென்றால்... ஆட்டிறைச்சி = கிலோ 450 ரூபாய் என்றால்... மாட்டிறைச்சி கிலோ 200 க்கும் சற்று குறைவுதான் என்பதால்... அதிக பட்சமாக 5000 - 6000 ரூபாய் வரை தான் பால் தரா கிழப்பசு விலை போகும். அவ்ளோதான் என்று விற்க வேண்டும்.
இஸ்லாம் என்ற இறை அருட்கொடை:
இந்த இடத்தில் இஸ்லாம் என்ற இறைமார்க்கம் ஏழைக் குடியானவர்களுக்கு அவர்களை அறியாமலேயே அவர்களின் துயர் துடைக்கும் காரியத்தை செய்து வருகிறது என்பதை கவனியுங்கள். இஸ்லாமிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தியாகத் திருநாள் என்றும் அழைக்கப் படுகிறது. படைத்த இறைவனுக்காக இப்ராஹீம் என்ற இறைத்தூதர்  தான் பெற்ற மகனையே தியாகம் செய்யத் துணிந்த அந்த நிகழ்வை நினைவு கூரும் வண்ணம் வருடாவருடம் கொண்டாடப்படும் நாளே தியாகத் திருநாள். அந்நாளன்று மனிதர்களால் வழக்கமாக உணவுக்காக அறுக்கப்படும் நாற்கால் கால்நடைகளில் ஒன்றை பலியிட்டு அதன் இறைச்சியை குடும்பத்தினரோடும் சமூகத்தில் ஏழைகளோடும் பகிர்ந்துண்பது  வசதிவாய்ப்புள்ளவர்கள்  மீது  கடமையாகப்பட்டுள்ளது. இதற்கு குர்பானி என்று இஸ்லாமிய வழக்கில் கூறப்படும். ஆடு என்றால் ஒரு குடும்பத்திற்கு ஒன்று பலியிடலாம். மாடு, பசு அல்லது ஒட்டகம் என்றால் ஏழு குடும்பங்கள் சேர்ந்து ஒரு பிராணியை பலியிடலாம் என்பது இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வரைமுறையாகும்.
பக்ரீத் காலத்தில் சந்தை நிலவரம் 
 மற்ற நாளில் 5,000 - 6,000 ரூபாய் விற்கும் ஆடு...  பக்ரீத் பண்டிகை சமயம் என்றால் மட்டும்... குர்பானிக்கு ஆடு விலை சந்தையில் கிட்டத்தட்ட  இரட்டிப்பு ஆகி விடும். ஆடு என்றால் ஒரு நபர் மட்டுமே குர்பானி தரவேண்டும் என்றும் சட்டம் இருப்பதாலும்... காளை மாடு எப்போதுமே அதற்குரிய அதிக விலையில் தொய்வு அடையாமல் உள்ளதாலும்... பால் தராத பசுவுக்கு வருஷத்தில் இந்த ஒரு நேரத்தில் மட்டுமே சந்தையில் கிராக்கி ஏறுகிறது.
அதாவது, முஸ்லிம்கள் பெரும்பாலானோர் ஆடுதான் குர்பானி தருவார்கள். அதிக வசதி உள்ளவர்கள் ஏழு பேர் சேர்ந்து  ஒட்டகம் பக்கம் குர்பானி கொடுப்பார்கள்.  அதுவே, காளை மாடு, பசு மாடு இவற்றில் ஏழு பேர் கூட்டு சேர்ந்து குர்பானி தரலாம் என்பதால்  குறைந்த வசதி உள்ளவர்கள்தான் மாடு பக்கம் போவார்கள்.
எனவே, வருஷத்தில் ஒருமுறை குர்பானி சந்தையில் பால் தராத பசு மற்ற நாளை விட சற்று அதிகமாக விலை போகும் என்பதால், பால் தராத பசுவை பக்ரீத் சீசன் வரை இழுத்துப்பிடித்து  கஷ்டப்பட்டு புறம்போக்கு நிலங்களில் மேய விட்டு அரவணைத்து வளர்க்கிறார்கள் ஏழை விவசாயிகள். பக்ரீத் சீசன்  வந்ததும் அவர்கள் முஸ்லிம்களிடம்தான் தேடி தேடி விற்பார்கள்.
அப்புறம், முஸ்லிம்களும்... ஒரே ஒருவர் குர்பானி தரும் ஆடு விலையே 8000... 10,000... எனும் போது... 'ஏழு பேர் சேர்த்து மாடு குர்பானி தரலாம்' என்ற சலுகை சட்டம் உள்ள... ஒட்டகம் காளை மாடு எல்லாம் அதிக விலை என்பதால்... பால் தராத பசுவை ஏழு பேர் சேர்ந்து குர்பானி தரலாம் என்பதால்...10,000 - 12,000 வரை அதிக விலை தந்து வாங்கி இந்த ஏழை விவசாயிகள் நஷ்டம் அடையாமல் காப்பாற்றுவார்கள். அதுவோ அவர்களுக்கு நல்லதொரு மூலதனம்! அதாவது... இரு தரப்புக்கும் இங்கே இலாபம்..! உலகெங்கும் இப்படித்தான் பால் தரா பசுவின் இறுதி கதை போகிறது.
இந்த நடைமுறை தடுக்கப்பட்டால்?
பசுவதைத் தடைச் சட்டம் என்ற பெயரில் இதை நாம் தடுத்தால் என்ன நடக்கும்? அந்த ஏழை விவசாயியின் பிழைப்பில் அநியாயமாக மண்ணைப் போடுகிறோம். அவருக்கே உணவுக்கு திண்டாட்டமாக இருக்கும்போது அந்த மாட்டுக்கு அவரால் உணவளிக்க முடியுமா? அவர் அதைப் பராமரிக்க முடியாத நிலையில் கட்டவிழ்த்து விட்டால் அடுத்தவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் இரையாகிறார். வேறுவழியின்றி கட்டிப்போட்டால் அது பசியால் துடிதுடித்து படிப்படியாக இறக்கிறது. இதுதான் பசுபக்தியா? இவ்வாறு ஒன்றுக்குப் பின் ஒன்றாக தொடர் விபரீதங்களுக்கு நாம் காரணமாகிறோம். 
ஈவிரக்கமில்லா கும்பலிடம் நாடு 
ஒரு ஏழை பால்கார குடியானவனின் இடத்தில் தம்மை வைத்து  சிந்தித்தால் மட்டுமே  
அவனுடைய கையறுநிலை புரியவரும்.  ஆனால் எந்தவித மனிதாபிமானமோ  ஈவிரக்கமோ இல்லாத ஒரு கும்பலிடம் நாடு - அதுவும் ஒரு ஜனநாயக நாடு- சிக்கிக்கொண்டு தவியாய் தவிக்கிறது. 
பசுபக்தி என்ற பெயரில் பசுவதைத் தடைச் சட்டம் என்று அநீதியான சட்டத்தை நாட்டுமக்கள் மீது திணித்து விவசாயிகள் மாடுகளை உள்நாட்டு சந்தைகளில் விற்கவிடாமல் தடுக்கிறார்கள். அதேவேளையில் மறுபுறம் இவர்களின் பினாமிகளால் நடத்தப்படும் மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனங்கள் இந்த பசுக்களையும் மாடுகளையும் மலிவு விலைக்கு வாங்கிக் கொண்டு  கொள்ளை லாபம் ஈட்ட வழிவகை செய்கிறார்கள். 

பசுக்காவலர்கள் என்ற ஒரு கைக்கூலிப் படையினரை ஏவிவிட்டு அப்பாவிகளைக் கொன்றும் தாக்குதல் நடத்தியும் நாட்டு மக்களிடையே பயத்தையும் விரக்தியையும் விதைக்கிறார்கள். நல்லிணக்கத்தோடு வாழும் சமூகங்களிடையே வெறுப்பை விதைத்து அதன்மூலம் குழப்பங்கள் விளைவிக்கத் துடியாய் துடிக்கிறார்கள். 

இறைவனின் எச்சரிக்கை: 

இறை விசுவாசிகளைப் பொறுத்தவரையில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கை ஒரு பரீட்சை போன்றது என்று நம்புவதால் வேதனைகளை இறைவனின் சோதனைகளின் பாகமாக எடுத்துக் கொள்கிறார்கள். மறுமையில் அவற்றுக்கான பரிசாக சொர்க்கம் வாய்க்க உள்ளது என்று நம்புகிறார்கள். 
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்என்று கூறுவார்கள். இத்தகையோர் மீதுதான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள். 
 (திருக்குர்ஆன் 2:155 - 157)
ஆனால் அதேவேளையில்  யாரெல்லாம்  இறைவனின் பூமியில் அவனது ஏற்பாடுகளில் குழப்பத்தை விளைவித்தும் அப்பாவிகளைக் கொன்றும் துன்புறுத்தியும் வருகின்றார்களோ அவர்கள் இறைவனின் தண்டனைகளில் இருந்து தப்ப முடியாது என்பதையும் இறைவன் எச்சரிக்கிறான்:
எவர்கள் சத்தியத்தை மறுத்துக் கொண்டும், இறைவனின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம். (திருக்குர்ஆன் 16:88.

நிச்சயமாக, எவர்கள் விசுவாசிகளான ஆண்களையும், விசுவாசிகளான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரி மீளவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.( திருக்குர்ஆன் 85:10) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக