இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்! அவரே இயேசு!

நமது மனித குலம் என்பது ஒன்றே ஒன்று. நமது இறைவனும் ஒரே ஒருவனே! எக்காலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்  எங்கு பிறந்தோரானாலும் நாம் ஒரே  குடும்பத்தைச் சேர்ந்தவர்களே! இதை நாம் ஒரு போதும் மறக்கக்கூடாது. இறைவன் தனது இறுதி மறைக் குர்ஆனில் தவறாமல் நினைவூட்டுகிறான்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
நம் மானிட குடும்பத்துக்கு வழி காட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களை அனுப்பி உள்ளான். அவர்கள் அனைவரும் நம்மவர்களே என்பதுதான் உண்மை. இந்த பரந்த மனப்பான்மையோடு அணுகினால்  நாம் இன்று இழந்து விட்ட சகோதரத்துவ உணர்வை மீண்டும் நிலை நாட்ட முடியும்.
இறைவனின் தூதர்கள் இடையே வேற்றுமை பாராட்டக் கூடாது என்பது இறைக் கட்டளை (திருக்குர்ஆன் 2:285).  அந்த இறைத் தூதர்கள் வரிசையில் வந்தவரே நமது இயேசு (அலைஹிஸ்ஸலாம்-அவர் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும்)
ஆம், சத்தியத்தை நிலைநாட்ட இப்பூமிக்கு வந்த மகத்தானதோர் இறைத்தூதர் ஏசு!
பிறந்த நாள் முதலே அற்புதங்கள்  பல நிகழ்த்திய மகான்!
அன்னை மரியாளுக்குப் பிறந்த அந்த அற்புதக்  குமாரன் அயராது  சத்திய போதனை செய்தார்!
அஞ்சா நெஞ்சனாக  அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும்  எதிராகப் போராடினார்! கடவுளின் பெயரால் பொய்யுரைத்து மக்களுக்கு இடையே பிளவுகள் உண்டாக்கும் மதகுருமார்களையும் மக்கள் சுரண்டப் படுவதையும் தீவிரமாக எதிர்த்தார்.
விளைவு ?...........அநீதியாளர்களின் சூழ்ச்சிக்கு ஆளானார் ஏசு!  அவரைக் கொன்று சத்தியத்தின் வளர்ச்சியை தடுக்க சதி செய்தனர் எதிரிகள் !
ஆனால் வல்ல இறைவனால் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்டார்!
ஆம், இறைவன் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்!
ஆம், அவரது வாழ்நாள் நெடுகிலும் அற்புதங்கள்....
= தந்தையின்றிப் பிறந்தார்...
= கைக்குழந்தையாக இருந்த போதே பொதுமக்கள் முன் பேசினார்!
= பிறக்கும்போதே இறைத்தூதராகவும் வேத அறிவோடும் அவதரித்தார்!
= பிறவிக் குருடர்களையும் குஷ்டரோகிகளையும் தடவியே குணப்படுத்தினார்!
= இறந்தவர்களை உயிர்பித்தார்.
= உணவு மரவையை வானில் இருந்து இறக்கினார்!
= முன்னர் வந்த இறைத்தூதை உண்மைப் படுத்தினார், பின்னர் வர இருக்கும் தூதர் பற்றி தீர்க்கதரிசனம் உரைத்தார்!
=  பகைவர்கள் தாக்கவந்தபோது அற்புதமாய் விண்ணேற்றமும் செய்தார்!
= இவையும் இன்னும் பலவும்! ஆனாலும் இவை எல்லாம் இதுவரை நிகழ்த்திய சில அற்புதங்கள்... ஆனால் இன்னும் அவர் நிகழ்த்த உள்ளவை பல!
ஆம், மீண்டும் இந்த பூமிக்கு வந்து இன்னும் பற்பல அற்புதங்களையும் புரட்சிகளையும் நிகழ்த்த உள்ளார் அந்த புனித மகான்!
அத்தனை அற்புதங்கள் நிகழ்த்தியபோதும்  அவை அனைத்தும்  தன்னை அனுப்பிய இறைவனின் செயலே அவை என்றார் இயேசு! அவன் அருளே அவை என்று தெளிவுபட மக்களுக்கு சொன்னார்!
= தந்தையின்றி பிறந்தார் என்பதற்காக தன்னை இறைமகன் என்று சொல்லிக் கொண்டதில்லை!
= யாருமே நிகழ்த்தாத அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியபோதும் தன்னையே கடவுள் என்றும் தன்னை வழிபடுங்கள் என்று மக்களை எவியதில்லை!
= இறைவனுக்கு நெருங்கியவர் என்று சிறப்பிக்கப் பட்டதற்காக தன்னை இடைத்தரகராக பாவிக்கச் சொல்லவில்லை! தன் மூலமே இறைவனை நெருங்க முடியும் என்று வாதிடவில்லை! நானே பாவங்களை மன்னிக்கின்றவன் என்று சொல்லிக்கொண்டதில்லை!
மாறாக அனைத்து இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு போதித்தது போலவே தன்னையும் விண்ணையும் மண்ணையும் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனை மட்டுமே வணங்கச் சொன்னார் அவர். அவன் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்து பரலோக இன்பமாம் சொர்க்கத்தை அடையவே மக்களுக்கு போதித்தார் இயேசு. அவரவர் பாவங்களுக்கு அவர்களே பொறுப்பு என்றார். பாவம் தவிர்த்து வாழவும் இறைவனிடமே நேரடியாக பாவமன்னிப்பு கோரவுமே கற்றுக்கொடுத்தார் இயேசு! அவர் மீது இறை சாந்தி உண்டாவதாக!
=  பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தம் செய்கிறவனே பரலோக
ராஜ்யத்தில் பிரவேசிப்பனேயல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே
என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை (மத்:7-21)

=  நீங்கள் மனம்திரும்பி பிள்ளைகளை போல ஆகாவிட்டால் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் (மத்:18-31)

இஸ்லாமிய- கிருஸ்தவ நல்லிணக்கச் சிறப்பிதழ் 
http://quranmalar.blogspot.com/2016/12/blog-post_25.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக