இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்


ஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "இளைஞர் சமுதாயமே! உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர்  திருமணம்  செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும்! ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்" என்று கூறினார்கள்.  அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)
இங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர்மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு  பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.
துறவறம் கூடாது :
அதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற பாலியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.
இறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)
 அவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :
திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.
அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)
தகாத உறவுகளுக்குத் தடை
திருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே! காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.
ஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே! இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்!
வரம்பு மீறுவோரின் நிலை
இறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே!
99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவு நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.
எனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக  செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.
78:21  நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.  வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக!  அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்!...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_6.html 
மறுக்க முடியுமா மறுமை வாழ்வை?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html 
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக