இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 நவம்பர், 2012

திருக்குர்ஆன் அருளப்பட்ட விதமும் பாதுகாக்கப்படும் முறையும்



திருக்குர்ஆன் என்பது நபிகள் நாயகத்தால் எழுதப்பட்ட நூல் என்ற ஒரு தவறான தகவல் இன்றும் பல சகோதர சமுதாய மக்களிடையே நிலவி வருகிறது. உண்மை என்னவெனில் இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன்! இதை கீழ்வரும் உண்மையை அறியவரும்போது புலப்படும்.

நபிகள் நாயகம் தங்கள் நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள். தங்களது 63-வது வயதில் மரணமடைகிறார்கள். இந்த 23 வருட காலகட்டத்தில் 13 வருடம்  மக்காவில் சத்தியப்பிரச்சாரம் செய்தார்கள் அவர்களும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்கிறது. கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, மக்காவைத் துறந்து சுமார் 500 கி..மீ. தொலைவில் உள்ள மதீனா நகருக்கு செல்ல நிர்பந்திக்கப் படுகிறார்கள். அங்கு ஏற்கனவே இஸ்லாம் பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும் அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள் அங்கும் படை எடுத்து வந்து தாக்க, நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய நேரிடுகிறது. போரில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்கி சத்தியத்தை ஏற்க வைக்கிறார்கள்.. அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தனது 63-வது வயதில் நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும் கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.

இவ்வசனங்கள் எவ்வாறு நபிகளாருக்கு வருகின்றன?
இறைவன் புறத்திலிருந்து வானவர் ஜிப்ரீல் இவ்வசனங்களை கொண்டு வந்து நபிகளாருக்கு ஓதிக்  காட்டுவார்கள். நபிகளாருக்கு எழுதவோ படிக்கவோ அறியாதவர்  தனக்கு முன் ஓதப்படும் வசனங்களை அவர் மனப்பாடம் செய்து கொள்வார் நபிகளார். அது இறைவனுடைய ஏற்பாடு. தொடர்ந்து ஜிப்ரீலிடம் தான் செவியுற்ற வசனங்களை தனது தோழர்கள் முன் ஓதிக காட்டுவார்கள் நபிகளார். அவற்றை தோல்களிலும் எலும்புகளிலும் எழுதி வைத்துக் கொண்டனர் நபித்தோழர்கள். அது மட்டுமல்ல அவ்வசனங்களின் கவர்ச்சியில் தங்களைப் பறிகொடுத்த தோழர்கள் அவற்றை தொழுகையிலும் தொழுகைக்கு வெளியேயும் அடிக்கடி ஓதும் பழக்கமுடையோரானார்கள். அதாவது ஒலி வடிவிலேயே திருக்குர்ஆன் வசனங்கள் பிரபலமாகின. புண்ணியம் கருதியும் தொடர்ந்த ஓதலின் காரணமாகவும்  பலரும் குர்ஆன் வசனங்களை  மனப்பாடம்   செய்தனர். குர்ஆன் என்ற வார்த்தையின் பொருளே ஓதப்படுவது என்பதே!
ஆம், அருளப்பட்ட நாள் முதல் இன்று வரை திருக்குர்ஆனை அதிகமதிகமாக ஒதிவருவது உலகெங்கும் முஸ்லிம்களின் பழக்கமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக