இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 7 நவம்பர், 2012

மறுக்கமுடியுமா மறுமை வாழ்வை?



= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம்!
= மரணத்திற்குப் பின் என்ன நிகழும்?
= மறுமை வாழ்வு என்பது உண்டா?
= மரணத்தை தவிர்க்க இயலாது. அதற்குப்பின் உள்ளதைத் தவிர்க்க இய!லுமா?
= மண்ணோடு மண்ணாகிப் போய்விடுமா இந்த மனிதன் என்ற மாபெரும் அற்புதம்?
= அது வளர்த்து வந்த ஆசாபாசங்களும் அறிவும் ஆற்றலும் உறவுகளும் திடீரென முறிவதா?
= அது விதைத்த வினைகள் அறுவடையின்றி அழிவதா?
= அது செய்த தியாகங்களுக்குப் பரிசேதும் இல்லையா?
= அது செய்த அக்கிரமங்களுக்கு தண்டனை ஏதும் கிடையாதா?
நம் புலன்களுக்கு இன்று அது எட்டவில்லை என்பதற்காக மறுமையை மறுக்க முடியுமா?

 வாருங்கள்..... நம்மைப் படைத்தவனின் கூற்றும் அவனது இறுதிவேதமும் ஆன திருக்குர்ஆனின் துணைகொண்டு இக்கேள்விகளுக்கும் ஏக்கங்களுக்கும்  விடைகாண்போம்!
-------------------------------------------- 
நாம் தாய் வயிற்றில் பத்துமாதங்கள் கர்ப்பத்தில் வாழ்ந்து இவ்வுலகுக்கு வந்தோம் என்பதையும் இன்று வாழ்வின் பல கட்டங்களைக் கடந்து ஒருநாள் மரணம் அடைவோம் என்பதையும் அதன் பின் புதைக்கப்பட அல்லது எரிக்கப்பட இருக்கிறோம் என்பதையும் நாம் உறுதியாக நம்புகிறோம்.  

இப்பயணத்தின் அடுத்த கட்டம் என்ன?
இறைவேதங்களும் இறைத்தூதர்களும் பின்வருமாறு கூறுகிறார்கள்:  நமது வாழ்வின் அடுத்தகட்டம் மண்ணறை வாழ்வு. அடுத்ததாக பயங்கரமான நிகழ்வுகளுக்குப் பின் உலகம் ஒருநாள் அழிக்கப்படும். அதைத் தொடர்ந்து மீணடும் இறைவன் புறத்திலிருந்து கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். அன்று இறைவனுக்கு கீழ்படிந்து வாழ்ந்தோருக்கு சொர்க்கமும் கீழ்படியாதோருக்கு நரகமும் விதிக்கப்படும். அதுதான் நமது நிரந்தர இருப்பிடமாக இருக்கும் 

  இவற்றை நம் புலன்களால் அறிய முடியாத நிலையில் நாம் உள்ளோம். ஆனால் நம் புலன்களுக்கு எட்டவில்லை என்ற காரணத்துக்காக அவற்றை மறுத்து விட முடியுமா? அவ்வாறு மறுப்பது என்பது பகுத்தறிவுக்கு இழுக்கு அல்லவா? புலன்களுக்கு எட்டும் தகவல்களை (sensible data) சேகரித்துக் கொண்டு எட்டாதவற்றை (insensible) ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்வதைத்தான் பகுத்தறிவு என்கிறோம். நம்மை மீறிய மீறிய ஒரு சக்திக்கு உட்பட்டுதான் நாம் இக்கட்டங்களைக் கடந்து வருகிறோம் என்று உணர்ந்த பிறகும் எப்படி இவற்றை அப்பட்டமாக மறுக்க முடியும்? மேலும் இவற்றை மறுப்பதும் அலட்சியம் செய்வதும் நாளை நரகத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறப்படும்போது இதுபற்றி ஆராயாமல் இருக்க முடியுமா?
 நம் பயணத்தின் அடுத்த கட்டங்களைப் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து உணரும் வண்ணம் அறிவுபூர்வமான வாதங்களை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.
படைத்தவனை மறுக்க முடியுமா?
படைத்தவனை மறுப்பவர்களைப் பார்த்து இறைவன் கேட்கிறான்:
52:35,.36 .எப்பொருளும் இன்றி அவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது அவர்களே படைக்கக்கூடியவர்களா? அல்லது வானங்களையும், பூமியையும் அவர்களே படைத்தார்களா? அவ்வாறில்லை! அவர்கள் உறுதியாக நம்ப மாட்டார்கள்
நாம் இவ்வுலகுக்கு வருவதும் போவதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. இவற்றை இயக்குபவன் கேட்கிறான்:
= 2:28. நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.

(திருக்குர்ஆன் இறைவனைக் குறிக்க அல்லாஹ் என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது. அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுளோ முஸ்லிம்களின் குலதெய்வமோ  அல்ல. வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பது இவ்வார்த்தையின் பொருள்.)
56:57-59    .நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?

வாழ்வும் மரணமும் அவன் கைவசமே!
57:2  .வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும்படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை
44:8  .அவனையன்றி (வேறு) நாயன் இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; அவனே மரிக்கச் செய்கிறான்; அவனே உங்கள் இறைவனாகவும் முன் சென்ற உங்கள் மூதாதையரின் இறைவனாகவும் இருக்கின்றான்.
22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான்.
இக்குறுகிய வாழ்வு ஒரு பரீட்சையே!
67:2  .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
ஒவ்வொரு உயிரும் மரணத்தைத் தழுவும்!
21:35 .ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.

இவ்வுலகு அழியும் , மீணடும் உயிர்பெறும்!
39:68 ஸூர் (எக்காளம்) ஊதப்படடால் உடன் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் - அல்லாஹ் நாடியவர்களைத் தவிர - மூர்ச்சித்து விடுவார்கள்; பிறகு அதில் மறு தடவை ஊதப்பட்டதும் உடன் அவர்கள் யாவரும் எழுந்து எதிர் நோக்கி நிற்பார்கள்.
நேரம் குறிக்கப்பட்ட நாள் அது!
அது என்று நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் இறைவனிடம் அது நிச்சயிக்கப்பட்ட நாள்.
78:17    .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகிவிடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
இன்று நம் வினைகள் பதிவாகின்றன!
36:12. நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம். 
இறைவன் கூறும் வினைப்பதிவேடுகள் ஒருபுறம் இருக்க நாம் நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை கவனித்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். இன்று CCTV கேமராக்களில் நிகழ்வுகள் பதிவாகி அவற்றிற்கு சாட்சிகளாக பயன்படுவதை நாமறிவோம். அவற்றைவிட நமது கண்களும் காதுகளும் அதிநுட்பமான தொழில் நுட்பம் கொண்டவை . இவையும் மறுமை நாளில் நம் வினைகளுக்கு சாட்சிகளாக வரும் என்றும் கூறுகிறது திருக்குர்ஆன்.
நம் வினைகள் முழுமையாக விசாரிக்கப்படும்!
99:6-8 .அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
நல்லோர் சொர்க்கத்தில் நுழைவர்!
4:57  (அவர்களில்) எவர்கள் இறைநம்பிக்கை; கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்;. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்; அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
தீயோர் நரகில் நுழைவர்!
78:21-26    நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும்.
உண்மை இதுவே, மற்றவை ஊகங்களே!
நம்மைப் படைத்தவன் நம் எதிர்காலத்தைப் பற்றி என்ன கூறுகிறானோ அதுமட்டுமே உறுதியான உண்மை! மற்றவை அனைத்தும் மனித ஊகங்களும் கற்பனைக் கதைகளும் ஆகும்.
3:185 ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.
மறுமையை நம்பமுடியவில்லையா?
மரித்தபின் மறுபடியும் உயிரோடு வருவோம் என்பதை நம்ப மறுப்பவர்களை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கச் சொல்லும் வசனங்களை நாம் திருக்குர்ஆனில் காணமுடிகிறது. இல்லாமையில் இருந்து அற்புதப் படைப்பாக நம்மை உருவாக்கிய அந்த வல்லவனே மீண்டும் உருவாக்குவான் என்கிறது குர்ஆன்!
36:77  மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப்படையான தர்க்க வாதியாகி விடுகிறான்.
36:78 .மேலும், அவன் தன் படைப்பை (தான் படைக்கப்பட்டதெப்படி என்பதை) மறந்துவிட்டு, அவன் நமக்காக ஓர் உதாரணத்தையும் கூறுகின்றான்; ''எலும்புகள் அவை மக்கிப் போய் விட்ட பின் அவற்றை உயிர்ப்பிப்பது யார்?'' என்று.
36:79 .''முதல் முதலில் அவற்றை உண்டு பண்ணியவனே (பின்னும்) அவற்றுக்கு உயிர் கொடுப்பான். அவன் எல்லாவகைப் படைப்புகளையும் நன்கறிந்தவன்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக!
36:80 .''பசுமையான மரத்திலிருந்து உங்களுக்காக நெருப்பை உண்டாக்குபவனும் அவனே; அதிலிருந்தே நீங்கள் (தீ) மூட்டுகிறீர்கள்.
36:81 .வானங்களையும் பூமியையும் படைத்தவன், அவர்களைப் போன்றவர்களபை; படைக்கச் சக்தியற்றவனா? ஆம் (சக்தியுள்ளவனே!) மெய்யாகவே, அவனே (பல வகைகளையும்) படைப்பவன்; யாவற்றையும் நன்கறிந்தவன்.
36:82 .எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; ''குன்'' (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது.
 நீங்கள் கடந்து வந்த கட்டங்களைப் பாருங்கள்:
22: 5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத்தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணாலும், பின்னர் விந்தாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும் பின்னர் முழுமைப் படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.
மீணடும் உயிர்த்தெழுதல் மிகப் பக்குவமாக நிகழும்
75:3, 4     (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று, அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.
 உங்களைச் சுற்றுமுள்ள அத்தாட்சிகளைப் பாருங்கள்:
நம் புலன்களுக்கு எட்டும் தகவல்களைக் கொண்டு எட்டாத விஷயங்களைப் பற்றி ஆராய்ந்து அறிவதுதான் பகுத்தறிவு என்பது. அவ்வாறு பகுத்தறிவால் ஆராயச் சொல்கிறான்:
41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும்; அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது; (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன்; நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.

30:19. அவனே உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான்; உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான்; இந்தப் பூமியை அது இறந்தபின் உயிர்ப்பிக்கிறான்; இவ்வாறே (மரித்தபின் மறுமையில்) நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.  

மரணத்தையும் உயிர்தெழுதலையும்  ஒவ்வொருநாளும் அனுபவிக்கிறீர்கள்!
தினமும் நாம் உறங்கி எழுகிறோம் . அப்போது என்ன நிகழ்கிறது? உறக்க நிலையின் போதும் நம் உயிர் நம்மைவிட்டுப் போய்விடுகிறது. அதாவது இறைவனால் கைப்பற்றப்படுகிறது. அவ்வாறு கைப்பற்றிய அவ்வுயிரைத் மீணடும் இறைவன் திருப்பித் தந்தால்தான் மீணடும் எழுகிறோம்.  திருப்பித் தராவிட்டால் உறக்கத்திலேயே நாம் மரணம் அடைகிறோம்.
39:42  அல்லாஹ் உயிர்களை அவை மரணிக்கும் போதும் மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கினறன.
மரணம் நம்மைத் தழுவும் முன் அவன்பால் திரும்புவோம்!
 10:31.   ''உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிப்புலன் மீதும் (உங்கள்) பார்வைகளின் மீதும் சக்தியுடையவன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும் உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (அகிலங்களின் அமைத்துக்) காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?'' என்று(நபியே!) நீர் கேளும். உடனே அவர்கள் ''அல்லாஹ்'' என பதிலளிப்பார்கள் ; ''அவ்வாறாயின் அவனிடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டாமா?'' என்று நீர் கேட்பீராக.
ஆம் அன்பர்களே! நம்மைப் படைத்து பரிபாலித்து வருபவன் நம் இறைவன். அவனுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். நமது உடல் பொருள், ஆவி என அனைத்தும் அவனுடையதே. அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்ந்தால் நாம் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம். மறுமையிலும் சொர்க்கத்தை அடையலாம். மாறாக அவனுக்குக் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்தால் இங்கும் அமைதியின்மையே. மறுமையிலும்  நரகமே! 
------------------- 
தொடர்புடைய ஆக்கங்கள்:
நல்லொழுக்கம் பேணுதலே இஸ்லாம் 
http://quranmalar.com/2015/06/blog-post_11.html
திருக்குர்ஆன் அருளப்பட்ட வரலாறும் பின்னணியும்  
http://quranmalar.blogspot.com/2012/09/100.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக